சேதமடைந்த சென்னை சாலைகள்-அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை: சென்னை நகரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்காமல் உள்ள மாநகராட்சியைக் கண்டித்து இன்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதிரில் நடந்த இந்தப் போராட்டத்திற்கு எம்.பி. செம்மலை தலைமை தாங்கினார். தென் சென்னை எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.எல்.ஏக்கள் பதர் சயீத், செந்தமிழ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
2 மாதத்தில் சாலைகள் சரியாகும்-மேயர்
இதற்கிடையே, சென்னை நகரில் மழையால் சேதமடைந்த சாலைகள் இன்னும் 60 அல்லது 70 நாட்களில் சரியாகி விடும் என சென்னை மாநகர மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் சென்னை மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ள புதிய சாலைப் பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்த ஆண்டு பருவமழை ஜூன் மாதம் முதல் தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகள் பழுதடைந்துள்ளன. சென்னை மாநகரில் 1,320 சாலைகள் 387 கி.மீ. நீளத்திற்கு ரூ. 117 கோடி செலவில் போர்க்கால அடிப்படையில் சாலைகள் போடப்பட்டு வருகின்றன.
முதல்வர் கருணாநிதி சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக 146 கி.மீ. நீளமுள்ள 266 பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகளுக்கு 3 சிப்பங்களாக ஒப்பந்தங்கள் கோரி முடிவு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து 100 கி.மீ. நீளத்திற்கு ரூ. 20 கோடி செலவில் பேருந்து சாலைகள், உட்புறச் சாலைகள் சீரமைப்பதற்கு ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்பட்டு, அவையும் நடைபெற்று வருகின்றன.
கடந்த 10 நாட்களாக சுமார் 25 சாலைகள் ரூ. ஒரு கோடியே 20 லட்சம் செலவில் முடிக்கப்பட்டுள்ளது. ஆணையர், துணை ஆணையர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும், நானும் தொடர்ந்து சாலைப்பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். சென்னை மாநகரில் 1320 சாலைப்பணிகளும் 60, 70 நாட்களில் முடிக்கப்படும் என்றார்.