எய்ட்ஸ் நோயாளிகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்-உயர் நீதிமன்றம்
விருதுநகர்: எய்ட்ஸ் நோய் கிருமி தாக்கப்பட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் விருதுநகர் மண்டல அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் பணிக்காக விண்ணப்பித்திருந்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் எய்ட்ஸ் நோய்க் கிருமி தாக்கியிருப்பது கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பணியில் சேர்க்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி கே. சந்துரு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசார்த்த அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
எச்.ஐ.வி. நோய் கிருமி தாக்குதல் இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவது அரசின் கொள்கைக்ககு புறம்பானது ஆகும். எய்ட்ஸ் நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச விதிகளின் அடிப்படையில் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்க வேண்டும் என்பது தான் சர்வதேச தீர்மானமாகும்.
இந்நிலையில் எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகையால், அவர்கள் இருவருக்கும் 8 வாரத்திற்குள் ஓட்டுநர் பணிக்கான நியமன உத்தரவு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.