பொது நுழைவுத் தேர்வு-இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவை நிராகரித்தது மத்திய அரசு
தமிழகத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு, ஏராளமான கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் சமீபத்தில் இந்திய மருத்துவக் கவுன்சில், எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு தேசிய அளவில் பொது நுழைவு தேர்வு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கு இனிமேல் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மருத்துவக் கவுன்சிலும் அவசரம் அவசரமாக அறிவித்தது.
இதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து மருத்துவக் கவுன்சிலின் உத்தரவை திரும்பப் பெற சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கவுன்சிலுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் எடுத்த முடிவு செல்லாது.
மருத்துவ கவுன்சில் சட்டம் 33வது பிரிவின் படி மத்திய சுகாதாரத்துறை அனுமதி பெற்றே மருத்துவ கவுன்சில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். ஆனால் இதை மருத்துவ கவுன்சில் மீறி விட்டது.
எனவே இது சட்ட விதிகளுக்கு புறம்பானது. எனவே இந்திய மருத்துவ கவுன்சில் பொது நுழைவுத் தேர்வு தொடர்பாக பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
மாநில அரசுகளுடன் ஆலோசிக்கப்படும்-சிபல்
இதற்கிடையே, அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாடு மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் வருகிற 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திருச்சி வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அகில இந்திய அளவில் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறவிப்பை இந்திய மருத்துவ கவுன்சில் திரும்பப் பெற்றுள்ளதாக செய்தித்தாள் மூலம் தெரிந்து கொண்டேன்.
மருத்துவக் கல்விக்கு பொது நுழைவுத் தேர்வு தேவையில்லை என மாநில அரசுகள் ஏற்கெனவே வலியுறுத்தி வருகின்றன. எனவே, இதுதொடர்பாக புது தில்லியில் ஜனவரி 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.
மத்திய சுகாதாரத் துறையின் உத்தரவைத் தொடர்ந்து தனது அறிவிப்பை மருத்துவக் கவுன்சிலும் திரும்பப் பெற்றுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் மத்திய அரசை மீறி அது செயல்பட முனையுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒருவேளை அது அப்படி செய்ய முனைந்தால் கவுன்சிலைக் கலைத்து மாநில அரசுகளை சமாதானப்படுத்த மத்திய அரசு முயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.