டீசல் - எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! - மத்திய அரசு
இதுகுறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறுகையில், "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆனாலும் இப்போதைக்கு டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தும் திட்டமில்லை. இப்போது விலையை உயர்த்தினால், ஏற்கெனவே உச்சத்தில் இருக்கும் பணவீக்கம் இன்னும் மோசமான கட்டத்தை அடையும்", என்றார்.
கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ 90 டாலர் என்ற நிலையை எட்டியுள்ளதால் டீசல் விலை உயர்த்தப்பட வேண்டும் என நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு விரும்புகிறது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் ரெங்கராஜன், "உணவு பணவீக்கம் தற்போது அதிகரித்துள்ளது. டீசல் விலையை உயர்த்தினால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் தற்போது விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.
விலையை உயர்த்துவது குறித்து அடுத்த நிதியாண்டில் அமைச்சரவை கூடி பரிசீலிக்கும். எனவே ஏப்ரல் மாத தொடக்கம் வரை டீசல் விலை உயர வாய்ப்பில்லை. டீசல் விற்பனையால் நாள் ஒன்றுக்கு 128 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவது உண்மைதான்", என்றார்.