பெங்களூரில் 23 நாடுகள் பங்கேற்கும் மெஷின் டூல் எக்ஸ்போ!
ஜனவரி 26-ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா உள்பட 23 நாடுகளின் தொழிலதிபர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
இந்திய நகரம் ஒன்றில் இத்தனை நாடுகள் பங்கேற்றும் மெஷின் கண்காட்சி நடப்பது இதுவே முதல்முறை. குறிப்பாக அமெரிக்கா இதற்கு முன் இதுபோன்ற கண்காட்சியில் பங்கேற்றதில்லை.
உலக அளவில் உலோக தொழிற்சாலை மற்றும் வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள், புதிய இயந்திர கண்டுபிடிப்புகள் இந்தக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.
இந்திய மெஷின் டூல் தயாரிப்பாளர் சங்கம் (IMTMA) ஏற்பாடு செய்துள்ள இந்தக் கண்காட்சியில் 800 நிறுவனங்கள் அரங்குகள் அமைக்கின்றன. ரூ 1400 கோடி மதிப்புள்ள 750 புதிய நவீன எந்திரங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
பெங்களூர் புறநகரில் உள்ள சர்வதேச வர்த்தக மையத்தில் ( Bangalore International Exhibition Centee - BIEC) இந்த கண்காட்சி நடக்கிறது.
இந்திய உலோகத் துறையைப் பொருத்தவரை உள்நாட்டுப் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது. இதற்குக் காரணம் தொழில்நுட்ப பற்றாக்குறைதான். இந்தத் துறையில் முன்னேற குறைந்தது ரூ 2000 கோடியாவது தேவை. இதற்கு மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும். அப்போதுதான் இப்போது 70 சதவீதமாக உள்ள உலோக இறக்குமதி அளவை 30 சதவீதமாகக் குறைக்க முடியும் என்கிறார் இந்திய மெஷின் டூல் தயாரிப்பாளர் சங்க தலைவர் சைலேஷ் சேத்.