சட்டசபைத் தேர்தல்: வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் 78,000 வாக்கு பதிவு இயந்திரங்கள்
நெல்லை: சட்டசபைத் தேர்தல் நெருங்குவதையடுத்து வட மாநிலங்களில் இருந்து 78 ஆயிரம் வாக்கு பதிவு இயந்திரங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
தமிழக சட்டசபையில் தற்போதுள்ள உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் மே மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
தமிழகத்துக்கு தேவையான வாக்கு பதிவு இயந்திரங்கள் உத்திர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து பெற வேண்டியுள்ளது. மொத்தம் 78 ஆயிரம் வாக்கு பதிவு இயந்திரங்களும், 59 ஆயிரம் கட்டுபாட்டு இயந்திரங்களும் தேவைப்படுகின்றன.
டெல்லி, உபியின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்குபதிவு இயந்திரங்களை பெற்று வர மாவட்டம் வரியாக அதிகாரிகளை அனுப்ப தமிழக துணை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக 30 மாவட்ட அதிகாரிகள் வடமாநிலங்களுக்கு விரைந்துள்ளனர். இந்த இயந்திரங்கள் நாக்பூரில் இருந்த ரயில் மூலம் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன.