இளங்கோவன் கட்சி துவங்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுரை
உடுமலை: முன்னாள் அமைச்சர் இளங்கோவன் காங்கிரஸில் இருந்து விலகி தனிக் கட்சி துவங்கி மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்று என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் உடுமலையில் நிருபர்களிடம் கூறியதாவது,
ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு கூட்டுக் கொள்ளை என்பதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை கைது செய்ய மத்திய அரசு தயங்குகிறது. மேலும், மக்கள் கண்துடைப்புக்காக நடத்தப்பட்டது தான் சிபிஐ ரெய்டு. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் கருணாநிதி ஏழைகள் இருக்கும் வரை இலவசம் தொடரும் என்றார். ஏழ்மையை ஒழிக்க திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். இல்லை என்றால் ஏழ்மையும் ஒழியாது, மேலும், இலவசத்திற்காக ஏழைகள் கையேந்தி நிற்கும் நிலையும் மாறாது.
கடந்த 1977-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எப்படி அனைத்து கட்சிகளும் ஒன்றாகத் திரண்டதோ அதேபோன்று தற்போது திமுகவுக்கு எதிராகவும் திரள வேண்டும். பாஜக தனது சொந்த பலத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அனைத்து ஜாதியினர் அடங்கிய அறவோர் குழு அமைத்து கோவில்கள் பாதுகாக்கப்படும். 'தி.மு.க. - காங்., கூட்டணி விரும்பத்தகாத கூட்டணி' என்று இளங்கோவன் கூறி வருகிறார். காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகாவிட்டால் மூப்பனார் போல் இளங்கோவனும் தனிக் கட்சி துவங்கி மக்களுக்கு சேவை புரிவார் என்று நான் நம்புகிறேன் என்றார்.