மெட்ரோ ரயில் திட்டம் பூந்தமல்லி வரை விரிவுபடுத்தப்படு்-ஆளுநர்
தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா உரை நிகழ்த்தினார். அப்போது மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் குறித்து அதில் இடம் பெற்றிருந்தது.
இதுகுறித்து ஆளுநர் கூறுகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூலக்கடை திருமங்கலம், மூலக்கடை திருவான்மியூர், லஸ் ஐயப்பன்தாங்கல் வழியாக பூவிருந்தவல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும்.
சென்னை நகரும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதேபோல் கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி போன்ற பிற நகரங்களும் வளர்ந்து வருகின்றன. இத்தகைய வளர்ச்சியினால் புதிதாக உருவாகிவரும் புறநகர்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
சென்னை மாநகராட்சி மற்றும் அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள புறநகர் பகுதிகள், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வளர்ச்சி மையமாகச் செயல்படும் முக்கிய நகரங்கள் மற்றும் அவற்றை ஒட்டி உள்ள பகுதிகளிலும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை போன்ற மாநகராட்சிகள், ஈரோடு, திருப்பூர், வேலுர், தூத்துக்குடி போன்ற புதிதாக அமைக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர், சாலைகள், கழிவு நீர் வசதி, திடக் கழிவு மேலாண்மை, மின்விளக்கு போன்ற பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுமார் ரூபாய் 15,000 கோடி தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான நிதி ஆதாரத்தை மாநிலத்தின் நிதி ஆதாரத்திலிருந்தும், சர்வதேச நிதியுதவி அமைப்புகளிடமிருந்து நிதியுதவி பெற்றும் தரம் மிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்று கூறப்பட்டிருந்தது.