வெங்காயம் விலை உயர்வுக்கு யூக வாணிபம் காரணமா..?-நாடு முழுவதும் சோதனை!
நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இன்று ஒரு கிலோ ரூ.60க்குமேல் விற்கப்படுகிறது.
வெங்காய விலையைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெங்காய ஏற்றுமதிக்கு தடையும் விதித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்துக்கான வரியை ரத்து செய்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பல டன் வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருந்தும் வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை.
வியாபாரிகள் தங்களுக்குள் ரகசிய கூட்டணி அமைத்து கொண்டு வெங்காய விலையை குறைக்காமல் ஏற்றி வருவதாக இந்திய வியாபார போட்டி ஆணையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதில், பெருநகரங்களில் உள்ள வியாபாரிகள் குடோன்களில் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, பெருநகரங்களில் உள்ள வெங்காய குடோன்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனை கொல்கத்தா, சூரத், வாரணாசி, கான்பூர் மற்றும் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. இச் சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டால் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.