விவசாயிகளுக்கு மின் இணைப்பு நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்: பாமக கோரிக்கை
தருமபுரி: விவசாயிகளுக்கு மின் இணைப்பு பெற காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் ஜி. கே.மணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் விவசாயிகள் நலன் காணப்பட வேண்டும். தற்போது விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின் இணைப்பு பெற மின்துறை அலுவலர்களை அணுகியபோது அவர்களின் நிபந்தனைகளைக் கேட்டு விவசாயிகள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
ஒரு சர்வே எண்ணில் எத்தனை ஏக்கர் நிலம் இருந்தாலும் 2 வது கிணற்றுக்கு மின் இணைப்பு வழங்க முடியாது என்றும், ஒரு சர்வே எண்ணில் கிணறுகளுக்கு மின் இணைப்பு வேண்டுமானால், கிணறுகளுக்கான இடைவெளி 150 மீட்டராக இருக்க வேண்டும் என்றும், மின் இணைப்புக்கு மின்துறை குறிப்பிட்டுள்ள மின்மோட்டார்கள் தான் வாங்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 3-ம் தேதியுடன் முடிவடைந்த மின் இணைப்பு பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்.
கிணறுகளுக்குள் இடைவெளி போன்ற நிபந்தனைகளைத் தளர்த்தி உத்தரவிடுவதுடன், இலவச பம்புசெட்டு பெற விண்ணப்பித்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.