கேரளாவில் பொங்கலுக்கு உள்ளூர் விடுமுறை விட கருணாநிதி கோரிக்கை
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...
கேரளத்தில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி, பத்தனம்திட்டா, வயனாடு உள்ளிட்ட இடங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டும் வகையில் ஆண்டுதோறும் அந்தப் பண்டிகையன்று குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என பாலக்காட்டில் உள்ள கேரள மாநில தமிழ் பாதுகாப்புக் கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரள மக்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடும் ஓணம் பண்டிகையை ஒட்டி, அந்த மாநில மக்கள் அதிகம் வாழும் நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய தமிழக மாவட்டங்களில் ஆண்டுதோறும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை அன்று, கேரளத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விட வேண்டும் என தமிழ் பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்தவர்களின் கோரிக்கையை பரிசீலித்து சாதகமான முடிவை அறிவிக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.