For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை விரட்ட வேண்டும்-விஜயகாந்த்

Google Oneindia Tamil News

சேலம்: தமிழகத்திலிருந்து திமுக ஆட்சியை விரட்ட வேண்டும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். இதற்காக கட்சியையும், தொண்டர்களையும் அடகு வைக்க மாட்டேன் என்று பேசியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

சேலத்தில் நேற்று நடந்த தேமுதிக மாநாட்டில் விஜயகாந்த் பேசியதாவது:

கருணாநிதி கீழ்த்தரமான அரசியல் நடத்தி வருகிறார். கருணாநிதி குடும்பம் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுகின்றனர். ஆனால், கோவில் கோவிலாக போகின்றனர். திருக்குவளைக்கு சென்றால் ஊதுவத்தி வாடையில் தான் கருணாநிதி இருக்கிறார்.

ஸ்டாலின் மனைவி பெயர் துர்கா ஸ்டாலின். ஆனால் வேறு பெயரில் அவரை அழைக்கின்றனர். கேட்டால், துர்கா கடவுள் பெயர் என்கின்றனர். சரி, ஸ்டாலின் என்பது தமிழ்ப் பெயரா என்று கேட்டால் அது காரணப் பெயர் என்கிறார்கள். எல்லோருக்கும் காரணப் பெயராக வைக்கிறார்கள். இப்போதுதான் 50 வயதைத் தாண்டி விட்டாரே ஸ்டாலின், நல்ல தமிழில் பெயர் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே.

இதை விஜயகாந்த் கூறினால் நான் பைத்தியக்காரன், முட்டாள் என்கின்றனர். தேர்தலுக்குப் பிறகு தெரியும் யார் பைத்தியக்காரன், முட்டாள் என்று.

ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாங்கள் நிரபராதிகள் என்று கூறுபவர்கள், ராமாயணத்தில் சீதை தீக்குளித்து நிரூபித்ததைப் போல், குதிக்க வேண்டியது தானே. கேட்டால் ராஜாவின் ஜாதியை சொல்லி தப்பித்து விடுகிறார்.

கருணாநிதி தனக்குப் பிரச்சினை வருகிறது என்றால் உடனே ஜாதியை கொண்டு வந்து விடுவார். 1967ல் அண்ணா மறைவுக்கு பின், முதல்வராக யார் வருவது என்று பிரச்சினை எழுந்தது. நெடுஞ்செழியனுக்கு அந்த வாய்ப்பு வந்தது. ஆனால் கருணாநிதியோ, அவர் உயர் ஜாதியான முதலியார் ஜாதிக்காரர். நானோ மிக மிக பிற்படுத்தப்பட்டவன். எனவே என்னையே முதல்வராக்குங்கள் என்று கெஞ்சி அந்தப் பதவியை வாங்கினார்.

ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என கூறுகிறார். கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் இருப்பார்கள். உங்களுடைய வரிப்பணத்தை எடுத்துக் கொண்டு, அதன் மூலம் இலவசங்களை வழங்குகிறார்.

இலவசமாக டிவியைக் கொடுத்து விட்டு கேபிள் டிவி மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதையெல்லாம் சிந்திக்க வேண்டும் மக்களே. கேட்டால் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார். ஆனால் இவர் ஏழைகள் வயிற்றில் அடித்துப் பிழைக்கிறார்.

காவலதுறை இன்று கருணாநிதியின் ஏவல் துறையாக உள்ளது. போலீஸ் ஸ்டேஷனில் போய் புகார் கொடுக்க முடியாது. கொடுத்தால் ஆளுங்கட்சிக்காரன் தலையிடுகிறான். எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தார்கள் போலீஸ் என்றனர். எங்கே கொடுத்தார்கள். மாநாட்டுக்கு வந்த அத்தனை வாகனங்களையும் ஆங்காங்கே நிறுத்தி வைத்து விட்டனர் போலீஸார். உங்க வேலையை சரியா செய்யுங்க. இதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும். ஓய்வு பெற்ற போலீஸ்காரர் குடும்பத்தையே வெட்டிக் கொல்கின்றனர்.அப்படிப்பட்ட கொலைகாரர்கள், அராஜகவாதிகள் இருக்கக் கூடிய ஊர் இது.

இந்த இடத்தில் மாநாடு நடத்த முடியாது, பக்கத்தில்தான் மந்திரி இருக்கிறார் என்று கூறினார்கள். இருந்துட்டுப் போகட்டுமே, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே இருக்கப் போகிறார். இதையெல்லாம் சொல்லி என்னைப் பயமுறுத்த முடியாது.

கொல்கத்தாவில் ஒரு லேடி (மமதா பானர்ஜி) பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவில் கூட சந்திரபாபு நாயுடு கூட உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் இவர் திடீரென கடற்கரைக்குப் போனார், சேரைப் போட்டு உட்கார்ந்து கொண்டார், பத்து நிமிடத்தில் உண்ணாவிரதம் முடிந்தது, ஈழத்தில் போர் முடிந்து விட்டது என்று கூறி விட்டுக் கிளம்பி விட்டார். அடுத்த நாளே அங்கு கொத்து குண்டுகளை வீசி குவியல் குவியலாக தமிழர்களைக் கொன்றனர். அதுகுறித்து கேட்டபோது, மழை விட்ட பிறகும் தூவானம் இருக்குமில்லையா, அது போலத்தான் என்றார்.

விஜயகாந்த்துக்கு முதல்வர் பதவி மீது ஆசை என்கிறார்கள். ஏன் இருக்கக் கூடாது. கருணாநிதிக்கு இல்லையா, அவரது மகன்களுக்கு இல்லையா.

விஜயகாந்த் கூட்டணிக்கு போவாரா? மாட்டாரா? என பத்திரிகையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்; நீங்களும் (பொதுமக்கள்) எதிர்பார்க்கிறீர்கள். நான் கட்சித் தொண்டர்களை அடகு வைக்க மாட்டேன்; உங்கள் தன்மானத்தை இழக்க விட மாட்டேன். நமக்கு வயது இருக்கிறது; போராடுவோம். நான் அடிமையாக மாட்டேன். ஒவ்வொரு கூட்டணியிலும் கட்சிகள் அடிமைப்பட்டு கிடக்கின்றன.

அப்படியே நான் அடிமையானாலும் கூட உங்களை அடிமையாக இருக்க விட மாட்டேன். உங்களது கெளரவம் பறி போக விட மாட்டேன்.

தேமுதிக ஆரம்பித்தபோது 71வது கட்சி என்றனர். பின்னர் பத்தோடு பதினொன்று, இத்தோடு இது ஒன்னு என்றனர். இப்போது தேமுதிக நம்பர் ஒன் கட்சி. நாம் இல்லாமல் யாராலும் இங்கு ஆட்சியமைக்க முடியாது.

கூட்டணியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் தன்மானம் கெடாத வகையில் கட்சி செயல்பாடு இருக்கும். கவலைப்படாமல் செல்லுங்கள் என்றார் விஜயகாந்த்.

மாநாட்டுத் தீர்மானங்கள்

மாநாட்டின்போது தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அவை:

- நாடு முழுவது அரிசி, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால், அனைத்து தொழில்களும் மந்தமடைந்துள்ளது. அதனால், பொதுமக்கள் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம் போல சிக்கி தவிக்கின்றனர். இதை தே.மு.தி.க., வன்மையாக கண்டிக்கிறது.

- நூல் விலையேற்றத்தால் நாட்டில் கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் முடிங்கியுள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நூல் விலையை கட்டுப்படுத்தி, கைத்தறி மற்றும் விசைச்தறித் தொழில் மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டும். விவசாய பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், இடைத்தரகள் அதிக லாபம் அடைகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இப்பிரச்னையை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

- தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. போலீஸ் ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறது. குற்றவாளிக்கு தண்டனை கிடைப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் மழையால் பாதித்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசின் சமச்சீர் கல்வி திட்டத்தில், தமிழக முதல்வரின் வேஷத்தை களைய வேண்டும். அனைத்து தரப்பினருக்கும் சமச்சீர் கல்வி கிடைக்க ஆவன செய்யவேண்டும்.

- பன்னாட்டு கம்பெனிகளுக்கு மின்சாரத்தை வழங்கிவிட்டு, சிறிய அளவிலான தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகளுக்கு மின் விநியோகத்தை தடை செய்வதை கண்டனத்துக்கு உரியது. கட்சத்தீவு பகுதியை இலங்கைக்கு தாரை வார்த்ததை கண்டிக்கிறோம். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்ஷே இந்திய வந்த போது, சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கிய மத்திய அரசையும், தமிழக அரசையும் தமிழ் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

- ஆக்டோபஸ் போல் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பம் ஆட்கொள்வதை கண்டித்து மக்களை கூட்டி போராட்டம் நடத்தப்படும். தி.மு.க.,வுக்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்று சேர்ந்து, சர்வாதிகார ஆட்சிக்கு சாவு மணி அடிக்க வேண்டும்.

- காவிரி பிரச்னை, பாலாறு பிரச்னை, ஒகேனக்கல் உள்பட மக்கள் பிரச்னைகளை தி.மு.க., நிறைவேற்றாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

- யார் தலையீடு இன்றியும் விசாரித்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர்களுக்கு தண்டனையை பெற்றுத்தரவேண்டும்.

- இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழியையும், ஆட்சி மொழியாக அங்கீகாரம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

English summary
DMDK leader Vijayakanth slammed DMK, DMK rule, CM Karunanidhi and Police in his Salem speech. He came down heavily on CM karunanidhi and his family. The conference adopted many motions including the one, Defeat DMK in the Assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X