2 ஜி லைசென்ஸ்... விதிகளை மீறிய நிறுவனங்களுக்கு 'அபராத சலுகை' ஆரம்பம்!
இன்னொரு பக்கம் இந்த நிறுவனங்களுக்கு சந்தடியில்லாமல் மீண்டும் அனுமதி தரும் வேலை தொடர்கிறது, அபராதம் என்ற பெயரில்.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை வெளியிட்ட நிலையில், மத்திய அரசு இப்படியொரு இழப்பே ஏற்படவில்லை என்று சாதித்து வருகிறது (அப்படியெனில் உச்சநீதிமன்ற கண்டனங்கள், ஆ ராசா ராஜினாமா, 90 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் எல்லாம் எதற்காக!).
மிகக் குறைந்த விலைக்கு உரிமம் பெற்ற நிறுவனங்களிடம், இன்றைய விலைக்கேற்ப இழப்பீட்டுத் தொகை பெறப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது நடப்பதைப் பார்த்தால் இவை எதுவுமே நடக்காது என்றுதான் தோன்றுகிறது. அபராதம் என்ற பெயரில் குறைந்தளவு தொகையை வாங்கிக் கொண்டு, இந்த நிறுவனங்களை செயல்பட அனுமதிப்பதில் தெளிவாக உள்ளது தொலைத் தொடர்புத் துறை. அடிக்கிற மாதிரி அடித்து, அழுகிற மாதிரி அழும் நாடகங்களாக இவை மாறும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு உதாரணம், குறித்த காலத்தில் சேவையைத் தொடங்காத பிரபல செல்போன் நிறுவனம் யூனிநார் நிறுவனத்திடம் வெறும் ரூ 9 கோடி அபராதம் பெற்றுக் கொண்டு செயல்பட அனுமதிக்கலாம் என்ற அரசின் முடிவு.
'செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு தகராறுகள் தீர்ப்பாயம்' இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதை சற்று விவரமாகப் பார்க்கலாம்...
நார்வேயின் டெலிநார் மற்றும் இந்தியாவின் யூனிடெக் நிறுவனங்களின் கூட்டு நிறுவனமே யூனிநார். முன்னாள் அமைச்சர் ஆ ராசா மூலம் 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கப்பட்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதால் இதன் லைசென்ஸை அனுமதிப்பதா ரத்து செய்வதா என்ற விவாதம் ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அலைவரிசை ஒதுக்கப்பட்டும் குறித்த காலகட்டத்துக்குள் இந்த நிறுவனம் சர்வீஸைத் துவக்கவில்லை. பொதுவாக உரிமம் பெற்ற 1 ஆண்டுக்குள் சேவை துவங்கப்பட வேண்டும். ஆனால் யூனிநார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் எடுத்துக்கொண்டது.
இதனால் யூனிநாருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தை ரத்து செய்ய மத்திய தொலைத் தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரத்தை தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்துக்குக் கொண்டு போனது யூனிநார். விசாரணையில், யூனிநாருக்கு மேலும் ஒரு வாய்ப்புத் தரலாம் என்று கூறிய தீர்ப்பாயத் தலைவர் சின்ஹா, இந்தத் தாமதத்துக்கு அபராதமாக, யூனிநார் தனது உரிமத் தொகையில் 60 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
10 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு 2 ஜி உரிமம் பெற்றுள்ளது யூனிநார். இதில் 4 வட்டங்களுக்கு உரிமக் கட்டணமாக ரூ 13. 10 கோடியைச் செலுத்தியுள்ளது. இதில் 60 சதவீதம் ரூ 9 கோடி. அதை மட்டும் அபராதமாக செலுத்தினால் போதும் என்கிறது தொலைத் தொடர்பு தீர்ப்பாயம்.
மேலும் 4 வட்டாரங்களுக்கான உரிமத்துக்கு ரூ 15.5 கோடி. லைசென்ஸ் பெற்று இத்தனை ஆண்டுகளாகியும் இந்தத் தொகையை இன்னும் செலுத்தவே இல்லை யூனிநார்!!
தீர்ப்பாயத்தின் இந்த முடிவை வரவேற்றுள்ளது யூனிநார் நிறுவனம் என்பது எல்லாவற்றையும் விட முக்கியமானது. தனக்கு போடப்பட்ட அபராதத்துக்கே அகமகிழந்து, வரவேற்பு தெரிவித்துள்ள நிறுவனத்தைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்துள்ளது.
இனி விதிமீறல் செய்து, நோட்டீஸ் பெற்றுள்ள நிறுவனங்கள் வரிசையாக தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்துக்குப் போகும். அங்கு சில கோடிகள் அபராதம் செலுத்திவிட்டு, சர்வீஸைத் தொடரக் கூடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது!