இன்னும் குறையாத வெங்காய விலை-மக்கள் அவதி தொடர்கிறது
வெங்காயத்தை உரிக்கும்போதுதான் கண்ணில் ஜலம் வரும். ஆனால் இன்றோ வெங்காயத்தைப் பார்த்தாலே கண்ணீர் பெருகிறது. அப்படி இருக்கிறது வெங்காயத்தின் விலை. இளகிய மனம் படைத்தவர்கள் மார்க்கெட் பக்கம் காய்கறி வாங்கப் போனால் மாரடைப்பு வராத குறை. அப்படி இருக்கிறது விலைகள் அனைத்தும்.
இந்தக்காய்தான் என்றில்லை, எந்தக் காயைத் தொட்டாலும் கடுமையாக இருக்கிறது விலைவாசி. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை குறைந்தபட்சம் ரூ. 50 முதல் 70 வரை விற்கிறது. மொத்த மார்க்கெட்டான கோயம்பேட்டில் கொஞ்சம் குறைவாக இருக்கும் என்று நினைத்துப் போனால் அங்கும் ரூ. 40 வரை விற்கிறார்கள்.
என்ன பிரச்சினை என்றால் சில்லறை விலைக்கு விற்கும் வியாபாரிகள்தான் இஷ்டத்திற்கு விலை வைத்து மக்களை வறுத்தெடுத்து வருகிறார்கள். ஓரளவுக்கு கூட வைத்து விற்றால் பரவாயில்லை. ரூ. 20 முதல் 40 வரை அதிகம் வைத்து அவர்கள் விற்பதால்தான் மக்களுக்குப் பெரும் அவஸ்தையாகியுள்ளது.
இப்படி விலைவாசி கடுமையாக இருப்பதால் மக்கள் எந்தக் காயை வாங்குவதாக இருந்தாலும் அதிகபட்சம் கால்கிலோ வரை மட்டுமே வாங்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சிலரோ, 100 கிராம் போதும்ப்பா என்று கூறுவதையும் கேட்க முடிகிறது.
தற்போதைய நிலையில் கோயம்பேடு மார்க்கெட் நிலவரப்படி பீன்ஸ் கிலோ ரூ. 25, அவரைக் காய் கிலோ ரூ. 32, பெங்களூர் தக்காளி கிலோ ரூ. 16, உருளைக்கிழங்கு ரூ. 13, பீட்ரூட் ரூ. 12, முள்ளங்கி ரூ. 8, பச்சை மிளகாய் ரூ. 15 என்று விற்கப்படுகிறது. இதை விட குறைந்தது ரூ. 5 முதல் 30 வரை சில்லறைக் கடைகளில் விற்கிறார்கள்.
என்று தணியுமோ இந்த வெங்காய சோகம்!