கபில் சிபலை நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க பொதுக் கணக்குக் குழுவுக்கு சிஏஜி கோரிக்கை
ராசா பதவிக்காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக சிஏஜி கூறியுள்ளது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஒரு பைசா கூட இழப்பு ஏற்படவில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் கபில் சிபல். தலைமைத் தணிக்கை அதிகாரியின் கணக்கீடு தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிபலின் பேச்சுக்கு பொதுக் கணக்குக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷி மற்றும் சிஏஜி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிபலை நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று பொதுக் கணக்குக் குழுவுக்கு சிஏஜி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய அமைச்சர் கபில் சிபலை நேரில் அழைத்து அவர் கூறியது குறித்து விளக்கம் கேட்க வேண்டும். அவர் கூறிய கருத்து மிகவும் மோசமானது. நடந்ததை முற்றிலும் மறைக்க முயல்வது போல தெரிகிறது. எனவே அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சிஏஜி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முன்பே அதை லீக் செய்து விட்டதாக சிபலும், சில காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளதையும் சிஏஜி ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.