சபரிமலையிலிருந்து திரும்புகையில் விபரீதம்-விபத்து, நெரிசலில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் பரிதாப பலி
இடுக்கி: சபரிமலையில் மகரஜோதியை தரிசித்து விட்டுஊர் திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பெரும் சோகத்தை சந்தித்துள்ளனர். வாகன விபத்திலும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகப் பெரிய கூட்ட நெரிசலிலும் சிக்கி 102 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.சபரிமலையில் நேற்று மகர ஜோதி தரிசனம் நடந்தது. இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சுற்றுவட்டாரத்தில் திரண்டிருந்தனர். ஜோதி தரிசனத்தை முடித்த பின்னர் பக்தர்கள் தத்தமது ஊர்களுக்குக் கிளம்பினர்.
இன்று பொங்கல் என்பதால் பொங்கல் பண்டிகையை உற்சாகத்தோடு கொண்டாட அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
சபரிமலையிலிருந்து பல்வேறு பாதைகள் உள்ளன. அதில் ஒன்று வண்டிப்பெரியார் வனப் பகுதி. இது மிகவும் அடர்ந்த காட்டுப் பகுதி, அபாயகரமான பள்ளங்கள் உள்ள பகுதியம் கூட. இப்பகுதி வழியாக லட்சக்கணக்கானோர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது புல்மேடு என்ற இடத்தில் திடீரென பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பக்தர்கள் தாறுமாறாக ஓட ஆரம்பித்து கீழே விழுந்து நெரிசலில் சிக்கினர். இந்த விபரீத சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். இதுவரை 102 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகளில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் எனத் தெரிகிறது.
நெரிசலுக்கு என்ன காரணம்?
கூட்ட நெரிசலுக்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. புல்மேடு பகுதியில் நேற்று இரவு எட்டு மணியளவில் பெருமளவிலான பக்தர்கள் வாகனங்கள் உள்ளிட்டவற்றில் போய்க் கொண்டிருந்தனர்.அப்போது ஒரு ஜீப் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த 400 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
அது விழுந்தபோது நிறைய பக்தர்கள் மீது மோதி விழுந்துள்ளது. இதைப் பார்த்து பக்தர்கள் அலறியடித்து ஓடியபோது நெரிசல் ஏற்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது.
அதேசமயம், இரு வாகனங்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததாக இன்னொரு தகவல் கூறுகிறது. இருப்பினும் கூட்ட நெரிசலில் சிக்கியே பலர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இடுக்கி,புல்மேடு, பீர்மேடு, தேனி ஆகிய ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இதுவரை சுரேஷ் (மைசூர்), அம்பரீஷ் (திருப்பூர்), கொரு குட்டி (கேரளா) ஆகியோரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் பெருமளவிலானோர் தமிழகம் மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். உள்ளூர் போலீஸாரும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து குறித்தும், உயிரிழந்தோர், காயமடைந்தோர் விவரங்கள் அறிய 04869-222049 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நிதியுதவி அறிவிப்பு
விபத்து குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிர்ச்சி தெரிவித்துள்ளோர். உயிர��ழந்தோர் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 50,000 நிவாரண நிதியும் வழங்கப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.