விலைவாசி: 19ம் தேதி மாநில நிதியமைச்சர்களுடன் பிரணாப் ஆலோசனை
வரும் 19ம் தேதி டெல்லியில் இக் கூட்டம் நடக்கிறது.
நாடு முழுவதும் அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலை தாறுமாறாக மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் பணவீக்கம் இதுவரை இல்லாத அளவுக்கு 18 சதவீதத்தை எட்டியுள்ளது.
உணவு பணவீக்கம் அதிகரிப்பதால் ஒட்டு மொத்த பணவீக்கத்தின் அளவும் உயர்ந்துவிட்டது. நவம்பரில் 7.48 சதவீதமாக இருந்த பணவீக்கம், டிசம்பரில் 8.43 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தவிர எரிபொருள் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உணவுப் பொருள் பணவீக்கம், இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு அதை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு மாநில நிதியமைச்சர்களுடன் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளேன். 19ம் தேதி டெல்லியில் நடக்கும் இக் கூட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும்.
உணவுப் பொருட்கள் சப்ளை செய்வதில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் சிக்கல்களை களையுமாறு மாநில அரசுகளுக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருக்கிறேன் என்றார்.