சபரிமலை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
கொச்சி : சபரிமலையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 109 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு, கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சபரிமலையில் மகர ஜோதி தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பிக் கொண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், மிகவும் குறுகலான, தொலைத் தொடர்பு, மருத்துவமனை, சாலை, குடிநீர், போக்குவரத்து வசதி என ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படாத வண்டிப்பெரியார் வனப் பகுதி வழியாக வந்த போது பெரும் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.
இதில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. பெருமளவில் பக்தர்கள் வருவாயைப் பெறும் சபரிமலை கோவில் நிர்வாகமும் சரி, கேரள அரசும் சரி, பக்தர்களுக்கு எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்து தராமல் இருந்து வருவது இந்த சம்பவத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து ஒரு வழக்காக பதிவு செய்துள்ளது. நீதிபதிகள் தோட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும் பவதாசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், இந்த சம்பவத்திற்கு பெரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், இதுதொடர்பாகவும், என்ன காரணத்தால் விபரீதம் நேர்ந்தது என்பது குறித்தும் வியாழக்கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேரள அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த இரு நீதிபதிகளும் அடங்கிய பெஞ்ச்தான், கேரள மாநிலத்தில் உள்ள கோவில்களின் விவகாரங்களைக் கவனிக்கும் தேவசம் துறையின் வழக்குகள் அனைத்தையும் கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் தங்களது உத்தரவில், உள்துறை, வனத்துறை, தேவசம் துறை ஆகியவற்றுக்கிடையே முறையான ஒருங்கிணைப்பு இருந்ததா, மூன்று துறையினரும் இணைந்து செயல்பட்டனரா என்பது குறித்தும் விளக்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக பலமுறை கேரள அரசை, கேரள உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு, அவர்களுக்குத் தேவையான வசதிகள் உள்ளி்ட்டவை குறித்து பலமுறை கேரள அரசை உயர்நீதிமன்றம் கண்டித்துள்ளது எச்சரித்துள்ளது. ஆனால் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி தட்டிக் கழித்து வருவது கேரள அரசின் வழக்கமாக உள்ளது.
கடந்த 1992ம் ஆண்டும், 2007ம் ஆண்டும் இருமுறை ஓய்வு பெற்ற நீதிபதிகளைத் தலைவராக கொண்ட கமிட்டிகள் சபரிமலை யாத்திரைக்கான பாதுகாப்பு வசதிகள் குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளன. ஆனால் இது எதையமே கேரள அரசு கண்டு கொண்டதில்லை, தூக்கி குப்பையில் போட்டு விட்டது. 2007ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பரிபூரணன் 70 பரிந்துரைகளை அரசுக்குத் தெரிவித்திருந்தார். ஆனால் ஒன்றைக் கூட கேரள அரசு ஏற்கவில்லை. அத்தனையையும் நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.