சபரிமலை விபரீதத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அமைச்சர்கள் ஆறுதல்
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடித்து வி்ட்டு புல்மேடு உப்புபாறை வழியாக வந்த பக்தர்கள் கூட்டத்தில் ஜீப் புகுந்து விபத்துக்குள்ளாகியதைத் தொடர்ந்து உயிர் தப்பிக்க ஓடிய ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரில் சிக்கினர். இதில் 109 பேர் உயிரிழந்தனர்.
இதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மீன்மலை கிராமத்தை சேர்ந்த முருகேசன், ராஜ்குமார், ஆகியோரும் அடக்கம். இவர்களின் உடல் சொந்த ஊரான மீன்மலைக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
தமிழக கதர் வாரிய துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அர்ச்சனாபட் நாயக் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினர். அதன் பின்னர் தமிழக அரசின் சார்பில் தலா ரூ.1 லட்சம் ரூபாய் நிதி உதவியையும் வழங்கினர்.
இதேபோல வருவாய்த்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ. பெரியசாமி, வண்டிப்பெரியார், தேனி, குமுளி மருத்துவமனைகளில் காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் தமிழக பக்தர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவருடன் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துவீரன் உடன் சென்றிருந்தார்.