ராசாவுக்குப் பதில் புதிய அமைச்சர் பதவிக்கு காங்.கை வலியுறுத்தவில்லை-திமுக
ஸ்பெக்ட்ரம் ஊழல் காரணமாக ராசா பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி குறைந்தது. தற்போது திமுகவிடம் 2 கேபினட் மற்றும் 4 இணை அமைச்ச்சர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டன. அப்போது திமுகவுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தரப்படவில்லை. இது கேள்விக்குறிகளை எழுப்பியது.
இருப்பினும் இதற்கு திமுக தரப்பில் வேறு காரணம் கூறப்படுகிறது. இதுகுறித்து கட்சியின் மூத்த எம்.பி. ஒருவர் கூறுகையில், ராசாவுக்குப் பதில் வேறு அமைச்சரை நியமிப்பது குறித்து காங்கிரஸிடம் வலியுறுத்த வேண்டாம் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் முதல்வரைக் கேட்டுக் கொண்டதாக எங்களுக்குத் தெரிய வருகிறது.
இதன் காரணமாகவே திமுக தலைமை, ராசாவுக்குப் பதில் புதிய அமைச்சரை நியமிப்பது தொடர்பாக காங்கிரஸிடம் வலியுறுத்தவில்லை என்று நாங்கள் கருதுகிறோம் என்றார்.
ராசாவுக்குப் பதில் யாரை அமைச்சராக்குவது என்ற குழப்பத்தில்தான் புதிய அமைச்சர் குறித்து காங்கிரஸை நிர்ப்பந்திக்கவில்லை திமுக என்று தெரிய வருகிறது. டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரில் ஒருவர் அமைச்சராக்கப்படலாம் என்று முன்பு கருதப்பட்டது. இவர்களில் பாலு மீது காங்கிரஸ் தரப்புக்கு அதிருப்தி உள்ளது. மற்ற இருவரும் அனுபவம் இல்லாதவர்கள். எனவே திமுக தலைமைக்கு யாரை அமைச்சராகப் போடுவது என்பதில் பெரும் குழப்பமாகி விட்டதாம். இதன் காரணமாகவே இப்போதைக்கு யாரையும் போட வேண்டாம் என்ற முடிவுக்கு திமுக வந்ததாக தெரிகிறது.
2வது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது, அமைச்சர்கள் நியமனத்தின்போது, பாலுவை அமைச்சராக்க திமுக முடிவு செய்தபோது அதை கடுமையாக எதிர்த்து நிராகரித்தது காங்கிரஸ் என்பது குறிப்பிடத்ததக்கது. மேலும், பிரதமருக்கும் கூட பாலுவைப் பிடிக்கவில்லை. இதற்கு சரியான காரணம் தெரியவில்லை என்ற போதிலும் பாலுவுக்கு அமைச்சர் பதவி கிடையாதுஎன்பதில் காங்கிரஸ் இன்னும் உறுதியுடன் இருப்பதாக தெரிகிறது. எனவேதான் பாலுவுக்கு கிடைக்காத அமைச்சர் பதவியை வேறு ஒருவருக்குக் கொடுக்க திமுகவும் சற்று தயங்குவதால்தான் இந்த முறை, புதிய அமைச்சர் பதவிக்கான கோரிக்கையை திமுக தரப்பு அதிகம் வலியுறுத்தாமல் விட்டு விட்டதாக தெரிகிறது.
இருப்பினும் சட்டசபைத் தேர்தலில் மிகுந்த பலத்துடன் வெற்றி பெற்றால், அதன் பின்னர் பாலுவுக்கு அமைச்சர் பதவியை வாங்கித் தந்து விடுவது என்ற முடிவில் திமுக இருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், அமைச்சர் பதவியை வலியுறுத்தாமல் விட்டதற்கு இன்னொரு அரசியல் காரணமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதுவும் ஸ்டாலின், அழகிரியின் ஐடியாதான் என்கிறார்கள். அதாவது இப்போது அமைச்சர் பதவியை வலியுறுத்தாமல் விட்டு விட்டால், சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது திமுகவிடம், காங்கிரஸ் அதிகம் முரண்டு பிடிக்காது என்ற கணிப்புதான் அது. ஒருவேளை அப்போது முரண்டு பிடித்தால், நமக்குத் தேவையானவர்களுக்கு அமைச்சர் பதவியைப் பெற அது எளிதானதாக இருக்கும் என்பதும் திமுக தரப்பின் கணிப்பாம்.
மொத்தத்தில் நேற்றைய அமைச்சரவை மாற்றத்தில் திமுக விட்டுப் போகவில்லை. மாறாக, திமுகவே விட்டுப் பிடிக்க முடிவு செய்து ஒதுங்கியிருந்தது என்பது தெரிய வந்துள்ளது.