டி.ஜி.பி. லத்திகா சரண் அறிக்கை பொய்- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
மதுரை: பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தவில்லை என்று தமிழக டிஜிபி லத்திகா சரண் கூறியுள்ளது பொய் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். முத்துக்கண்ணன், செயலாளர் ஆர். வேல்முருகன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போலீசார் கடுமையான தாக்குதல் நடத்தினர்.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியை திருப்திபடுத்த பதில் என்ற பெயரில் ஒரு கற்பனை கதையை காவல்துறை தலைவரே வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
அனைத்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் இந்த போராட்டச் செய்தியும், புகைப் படங்களும் மிக விவரமாக, முழுமையாக வெளிவந்த பிறகும் ஒன்றுமே நடக்காததை போல டி.ஜி.பி. பொய் அறிக்கை கொடுத்திருக்கிறார். ஆனால், பத்திரிகைகள் படித்த சாதாரண மக்கள் கூட சில உண்மைகளை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
மத்திய காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை அந்தந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு அளித்துவிட்டன. ஆட்சியாளர்கள் பெட்ரோல் விலை உயர்வுக்கும் தங்களுக்கும் சம்மந்தம் இல்லாதது போல் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவது எப்படி சட்டவிரோதமாகும்? மத்திய அரசு நிறுவனம் என்பது மக்களுக்கு அப்பாற்பட்டதல்ல.
பெட்ரோல் விலை குறைப்புக்காக மனு அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்த போது அதனை மறுத்து தடியடி நடத்திய காவல் துறையினர், தலைவர்களை மனு அளிக்க அழைத்துச் செல்ல வாக்குறுதி அளித்திருந்தால் தடியடி நடத்தியிருக்க வேண்டியதில்லை.
ஆயில் பவன் வளாகத்தில் சென்ற தோழர்கள் அமைதியாக உட்கார்ந்து மனுகொடுக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளன. அப்போது சீருடையில்லாத சில காவல்துறையினரும், பெயர் பேட்ஜ் இல்லாத காவல்துறையினரும் கூட்டமாக சேர்ந்து போராட்டக்காரர்களை கொடூரமாகத் தாக்கியதும் பத்திரிகையில் புகைப்படமாக வெளிவந்துள்ளன.
தலைப்புச் செய்தியை வாசித்த காவல்துறை தலைவர், புகைப்படங்களை பார்க்கவில்லையா ? தாக்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் வீடியோவாக வந்ததை பார்த்த தமிழக முதல்வர் தாக்குதல் நடத்தியவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தார். இதை எல்லாம் விட்டு விட்டு தாக்கியவரிடமே விளக்கம் கேட்பது எந்த வகையில் நியாயம்.
கடுமையான விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையிலிருந்து பார்த்தால் மேற்கண்ட நியாயம் புரியும். ஆனால் ஆட்சியாளர்களும், காவல் துறையினரும் போராட்டக்காரார்களை அரசியல் எதிரியாக பார்ப்பதன் விளைவாகத்தான் இது போன்ற மூர்க்கத்தனமான தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தமிழக டி.ஜி.பி.யின் அறிக்கை அவர் வாயிலிருந்து வரும் தமிழக முதல்வரின் வார்த்தையாகவேத் தெரிகிறது.
கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு முதலுதவிகூட அளிக்காமல் மண்டபத்திலேயே வைத்திருந்தனர். காயமடைந்து ரத்தம் சிந்திய எட்டு பேரை மட்டும் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அவர்களை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. மாறாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வாகனத்திற்குள்ளேயே 3 மணிநேரத்திற்கு மேல் உட்கார வைத்திருந்தனர். பிறகு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில மாத்திரைகளை மட்டும் கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
எனவே, தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விவகாரத்தில் தலையிடுவது உண்மை என்றால் வழக்குகளை வாபஸ் பெறுவதோடு, சீருடை இன்றி தாக்கிய போலீசாரை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.