கருணாநிதி வழியில் ராமதாஸ் குடும்பம்-வன்னியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
ஈரோடு: கருணாநிதி குடும்பம் போல் ராமதாஸ் குடும்பத்தினரும் வளமாக வாழ்ந்து வருகின்றனர் என வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ராமமூர்த்தி குற்றம் சாட்டினார்.
ஈரோட்டில் வன்னியர் கூட்டமைப்பு மேற்கு மண்டல பொதுக் குழு கூட்டம் வீரப்பன் சத்திரத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் வன்னியர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது,
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தான். இதனால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க -வுக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம்.
வன்னிய மக்களுக்கு என எந்தவித குரலும் கொடுக்காதவர் ராமதாஸ். கருணாநிதி குடும்பத்தினர் போல ராமதாஸ் குடும்பத்தினரும் வளமாக வாழ்ந்து வருகின்றனர்.
109 ஜாதியினருக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. வன்னியர்களுக்கு என 15 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 21 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.
ராமதாசை வன்னியர்களும், பொது மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தான் லோக்சபா தேர்தலில் ஏழு இடங்களில் அவருக்கும், அவருடைய கட்சிக்கும் தக்க பாடம் கற்பித்துள்ளனர் என்றார்.