அரச்சலூரில் கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 250 பேர் கைது
ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் இன்று கள் இறக்கி விற்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
தமிழகத்தில் கள் இறக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கக் கோரி கடந்த பல வருடங்களாக கள் இயக்கம் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு கள் இயக்கம் சார்பி்ல் கள் இறக்கி விற்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்திற்கு அரசு தடை விதித்தது.
இருப்பினும் தடையை மீறி அரச்சலூரில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பனை மற்றும் தென்னை விவசாயிகள், அரச்சலூருக்கு வந்திருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கள் இறக்கப்படுவதைத் தடுப்பதற்காக ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் இன்று அதிகாலை முதலே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அரச்சலூரில், ஈரோடு மாவட்ட எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில், 700 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் போலீஸ் தடையை மீறி தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லுசாமி, அரச்சலூரில் உள்ள தனது வீட்டில் உள்ள ஆறு பனை மரத்தில் இருந்து கள் இறக்கி, இன்று காலை 10 மணிக்கு விற்பனை செய்தார். இதையடுத்து நல்லுசாமியும், சங்க நிர்வாகிகளும் கள் குடித்தனர்.
இதையடுத்து பனை மரத்தில் ஏறிய இளைஞர்கள், கள் வாங்கிக் குடித்தவர்கள் என 250க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.
முன்னதாக இந்தப் போராட்டத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தொடங்கி வைப்பதாக இருந்தது. இருப்பினும் அவர் வரவில்லை.