எடியூரப்பா மீது நீதிமன்றத்தில் 2 ஊழல் வழக்குகள் பதிவு!
நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் எடியூரப்பாவுக்கு பங்கிருப்பதாகக் கூறி வழக்கறிஞர்கள் சிரஞ்சன் பாஷா மற்றும் கே என் பாலராஜ் ஆகியோர் இந்த வழக்குகளைப் பதிவு செய்தனர்.
எடியூரப்பாவின் இரு மகன்கள், மருமகனும் மல்லூரு எம்எல்ஏவுமான கிருஷ்ணையா ஷெட்டி மற்றும் இவர்களின் த்வாலகிரி ட்ரஸ்ட் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நம்பிக்கை மோசடி, சட்டத்தை ஏமாற்றியது மற்றும் அரசுப் பணம் முறைகேடு போன்றவற்றின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் வரும் ஜனவரி 24-ம் தேதி கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ஹிப்பாராகி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
அரசு நிலம் ஒதுக்கீட்டு விவகாரத்தில் எடியூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்து இன்று காலை உத்தரவிட்டார். இந்நிலையில், உடனடியாக முதல்வர் மீது இன்றே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆளுநர் பரத்வாஜ் பிறப்பித்த உத்தரவின் நகலைக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி கர்நாடக அமைச்சர்கள் பேரணி நடத்தினர்.
கர்நாடகா முழுவதும் பெரும் பாதிப்பு
இதற்கிடையே ஆளுநரை திரும்பப் பெறக் கோரி ஆளும் பாஜகவினர் நடத்திய பந்த் காரணமாக கர்நாடகத்தில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. மங்களூர், தும்கூர், தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 100 சதவீத பாதிப்பு இருந்தது.
இந்த பந்த் காரணமாக 31 பேருந்துகள் எரிக்கப்பட்டன. ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன.
ராஜினாமா செய்ய முடியாது - எடியூரப்பா
இந்நிலையில், ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வீர்களா என முதல்வர் எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?" என்று திருப்பிக் கேட்டார்.
பெங்களூரில் இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், "ஒரு மாநில முதல்வர் மீது யாராவது வழக்குப் போட்டால் உடனே ராஜினாமா செய்வார்களா? இதுபோல எந்த மாநிலத்திலாவது பார்த்திருக்கிறீர்களா? நான் மட்டும் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும்?" என்றார் எடியூரப்பா.
இந்த விவகாரத்தில் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர் நிதின் கட்காரியும் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உத்தரவை எதிர்த்து வழக்கு
இதற்கிடையே, ஆளுநரின் இந்த உத்தரவுக்கு தடை கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கர்நாடக பாஜக முடிவு செய்துள்ளது. திங்கள் கிழமை வழக்குத் தொடரப்படும் எனத் தெரிகிறது.
ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்து கேவியட் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளனர் எடியூரப்பா மீது இப்போது வழக்குப் பதிவு செய்துள்ள சிரஞ்சன் பாஷா மற்றும் கே என் பாலராஜ்.