கோயம்பேட்டில் குறைந்தாலும் சில்லறைக் கடைகளில் விலை குறையாத வெங்காயம்!
கடந்த 4 மாதமாக வெங்காயம், தக்காளி விலை அளவுக்கு அதிகமாக வைத்து விற்கப்பட்டு வருகிறது.
மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வெங்காயம் ரூ.100 வரை விற்கப்பட்டது. இதே போல் தக்காளி கிலோ ரூ.60 வரை விற்கப்பட்டது.
வெங்காயம் விலையைக் குறைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்த நிலையிலும் ரூ.50 வரை வெங்காயம் விற்கப்பட்டது. நடுத்தர பெரிய வெங்காயம் ரூ.40 வரை விற்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் வெங்காயம் விலை ரூ.60 வரை உயர்ந்து விட்டது. தற்போது மழை காலம் முடிந்து வெயில் அடிக்க தொடங்கி விட்டதால் வெங்காய வரத்து அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
இதனால் விலை வேகமாக குறைந்து வருகிறது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் முதல் ரக பெரிய வெங்காயம் கிலோ ரூ.38 க்கு விற்கப்படுகிறது.
அதற்கு அடுத்த ரகம் ரூ.26க்கு விற்கப்படுகிறது. சுமாரான பெரிய வெங்காயம் கிலோ ரூ.20க்கு கிடைக்கிறது.
ஆனால் சில்லறை கடைக்காரர்கள் வாங்கி கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை லாபம் வைத்து விற்கிறார்கள். இன்னும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரும் என்றும், கோயம்பேடுக்கு அதிக அளவில் வெங்காயம் வர ஆரம்பித்ததும் சில்லறை கடைகளிலும் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
சில்லறைக் கடைகளில் இன்றைய விலை நிலவரம், வெங்காயம் கிலோ ரூ 48. தக்காளி கிலோ ரூ 32.