சச்சினுக்கு 'பாரத ரத்னா'? - இன்று தெரியும்!!
அவருக்கு இந்த விருது கிடைக்குமா இல்லையா என்பது இன்று தெரிந்துவிடும்.
இந்தியாவின் உயரிய மற்றும் கௌரவமிக்க விருதான பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கவிருப்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
சச்சினுக்கு பாரத ரத்னா கிடைத்துவிட்டால் இந்த விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் ஆகிவிடுவார்.
இந்த முறை சச்சின் பெயரை ஏராளமான அரசியல்வாதிகளும் நடுநிலையாளர்களும் பரிந்துரைத்துள்ளனர். அதனால் அவர் இந்த விருதினைப் பெறுவது உறுதி என்றும் கூறுகின்றனர்.
இது குறி்தது கடந்த சில நாட்களுக்கு முன் சஞ்சய் நிருபம் எம். பி. கூறுகையில், "நாங்கள் சச்சின் பெயரை உறுதியாக பரிந்துரைத்துள்ளோம். இதன் முடிவு இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்," என்றார்.
கடந்த 2003-ம் ஆண்டே பாரத ரத்னா விருதுக்கு சிவ சேனாவும், அப்போதைய மனிதவள அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியும் சச்சின் பெயரைப் பரிந்துரைத்தனர்.
ஆனால் சச்சின் எப்பொழுது ஒரு நாள் சர்வதேச போட்டியில் 200 ரன் குவித்த முதல் கிரிக்கெட் வீரர் ஆனாரோ அன்று முதல் அவருக்கு ஆதரவு பெருகிவிட்டது. அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தான் இந்த புதிய சாதனையப் படைத்தார்.
இது குறித்து சச்சினிடம் கேட்டதற்கு, "இது ஒரு அரிய கௌரவம். நான் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பாரத் ரத்னா விருது கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கிடைக்கும். இல்லாவிட்டாலும் வருத்தமில்லை" என்று தன்னடக்கத்துடன் பதில் கூறினார்.