முத்துக்குமார் நினைவு தினம்: 50 பேர் கைது
சென்னை: தமிழ் ஈழப் பிரச்சினைக்காக தன்னுயிர் நீத்த முத்துக்குமாரின் இரண்டாம் நினைவு தினத்தையொட்டி, அவர் உயிர் நீத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
2009-ம் ஆண்டு தமிழ் ஈழத்தில் இறுதிக்கட்டப் போர் உச்சத்திலிருந்தபோது, தமிழர் படும் துயரம் காண முடியாமல், அவர்களுக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் காரணமாகவும், தனது மரணத்தால் தமிழரை எழுச்சி பெற வைக்க வேண்டும் என்ற ஆவேசத்திலும் தீக்குளித்து இறந்தார் முத்துக்குமரன்.
இதையொட்டி சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் அருகே முத்துக்குமார் தீக்குளித்த இடத்தில் அஞ்சலி செலுத்த தமிழர் எழுச்சி இயக்கம் முடிவு செய்திருந்தது. அதன்படி அந்த இயக்கத்தினர் இன்று காலை அஞ்சலி செலுத்த வந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். தடையை மீறி அஞ்சலி செலுத்த முயன்றவர்களில் 50 பேரை கைது செய்தனர் சென்னை மாநகர போலீசார்.
முன்னதாக தமிழர் எழுச்சி இயக்கத்தினர், மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட ஆங்கிலேயர் பெயரான ஹடோஸ் சாலையின் பெயரை மாற்றி, தமிழ் இனத்திற்காக உயிர்நீத்த முத்துக்குமார் பெயரைச் சூட்ட வேண்டும்.
பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், உரிமைகளையும் பெற்றுத் தந்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழ் மொழிபோரில் உயிர் இழந்தவர்களுக்கு சிறப்பு செய்வதைப்போல, தமிழ் இனத்துக்காக உயிர்நீத்த முத்துக்குமார் உள்ளிட்ட 19 தியாகிகளுக்கு தமிழக அரசு சார்பில் நினைவு தூண் எழுப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.