முத்துக்குமார் 2-ம் நினைவு தினம்: தலைவர்கள் அஞ்சலி
கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தற்காலிக நினைவுத்தூண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் கூறுகையில், "ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமாரின் நினைவை நனவாக்குவது நமது கடமை. தமிழ் ஈழத்தை வென்றெடுக்க இந்நாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். முத்துக்குமாரின் கனவை நனவாக்குவது பிரபாகரன் கனவை நனவாக்குவது போன்றதாகும்," என்றார்.
அவருடன் வன்னி அரசு, இரா. செல்வம், வட சென்னை மாவட்ட செயலாளர் கபிலன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர்
பழ. நெடுமாறன், 'புதிய பார்வை' ஆசிரியர் மா. நடராசன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் முத்துக்குமார் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
நாம் தமிழர் கட்சி சார்பிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஆவல் கணேசன், சுந்தர மூர்த்தி, தங்கராசு, அமுதா நம்பி, வக்கீல் கயல்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், மள்ளர் மீட்பு களம் உள்பட பல்வேறு தமிழ் ஈழ ஆதரவு அமைப்பினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமாரின் தங்கை தமிழரசி, அவரது கணவர் கற்குவேல்ராஜ், குழந்தைகள் புவனேஷ், முத்து எழில் ஆகியோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
முத்துக்குமார் நினைவு நாளையொட்டி கன்னியாகுமரியில் சீமான் தொடங்கி வைத்த ஈகச்சுடர் ஊர்தி இன்று காலை கொளத்தூரை வந்தடைந்தது.
நினைவுத்தூண் அமைக்கப்பட்டிருந்த இடம் அருகே முத்துக்குமார் மற்றும் ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்தவர்களின் படங்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. முத்துக்குமார் தீக்குளித்த போது அவர் மரண வாக்கு மூலமாக அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பப்பட்டது.
பல்லாவரம் அடுத்த பம்மலில் முத்துக்குமார் படத்திற்கு மதிமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.