தமிழகத்தை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது திமுக-ஜெ.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட மாத்தூர் முதல் நிலை ஊராட்சி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதையும் தி.மு.க. அரசு செய்து கொடுக்கவில்லை. இங்குள்ள பாதாள சாக்கடை சரியாக பராமரிக்கப்படாததன் காரணமாக சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், பூங்காவில் குப்பைகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும், இவற்றின் காரணமாக பலவித நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதாகவும், பெரும்பாலான சாலைகள் பழுதடைந்து இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அரோமெட்டிக் வளாகம் அமைப்பதற்காக 1263 ஏக்கர் விவசாய நிலம் தி.மு.க. ஆட்சியில் ஆர்ஜிதம் செய்யப்பட்டதாகவும், இந்தத் திட்டம் தோல்வி அடைந்ததன் காரணமாக, ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களை ஆரோமெட்டிக் நிறுவனம் தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், கடப்பாக்கம், தீயப்பாக்கம், சென்றம்பாக்கம், விச்சூர், வெள்ளிவாயல் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட மக்கள் ஆண்டாண்டு காலமாக உபயோகித்து வரும் ஆமுல்லைவாயல் – அரியலூர் சாலையை நிரந்தரமாக மூட ஆரோமெட்டிக் நிறுவனம் முயற்சி செய்வதாகவும், அந்த சாலை மூடப்பட்டால் அரியலூர், கடப்பாக்கம், ஆண்டார்குப்பம் பகுதிகளில் இருந்து மணலி நகரத்திற்குச் செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.
பதுக்கல், கடத்தல் போன்றவற்றை தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது. தி.மு.க. அரசின் இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, கட்டுமானப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்துவிட்டன. மொத்தத்தில் தமிழகத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
எனவே, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் சட்டமன்றத் தொகுதி, புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட மாத்தூர் முதல் நிலை ஊராட்சியில் நிலவி வரும் அவல நிலைக்குக் காரணமான, ஆமுல்லைவாயில் அரியலூர் சாலை நிரந்தரமாக மூடப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக சார்பில் 31.1.2011 திங்கட் கிழமை புழல் ஒன்றியம், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. முதல் மெயின் ரோடு காமராஜர் சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.