நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் ஒரே நேரத்தில் மாற்றம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 6 தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தாலுகா தாசில்தார்கள் ஓராண்டுக்கும் மேலாக பணியில் நீடித்து வந்தனர். வாக்காளர் சேர்ப்பு பணிகள் நடந்து வந்ததால் தாசில்தார்களை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில் வரைவு வக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து தாசில்தார்கள் அதிரடியாக மாற்றப்பட்டனர். பாளையங்கோட்டை தாசில்தார் சங்கர சுப்பிரமணியன் நதி நீர் இணைப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் தங்கவேலு பாளையங்கோட்டை தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லை தாசில்தார் சுப்பையா மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், சங்கரன்கோவில் ஆதி திராவிட நல தாசில்தார் அபுல் காசிம் நெல்லை தாசில்தாராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பிரமணியன் ராதாபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராதாபுரம் தாசில்தாராக இருந்த கிருஷ்ணமூர்த்தி சங்கரன்கோவில் ஆதி திராவிட நல தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரிடம் சங்கரன்கோவில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பொறுப்பும் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ஜெயராமன் பிறப்பித்துள்ளார்.