திமுகவினர் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு எதிராக வாக்களியுங்கள்-விஜயகாந்த்
சென்னை: தேர்தலின்போது திமுகவினர் பணம் தருவார்கள். அதை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிக் கொண்டு திமுகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கூட்டணி அரசியலுக்குத் தயாராகி விட்ட விஜயகாந்த் தற்போது பேரம் ஸ்டேஜில் இருப்பதாக கூறப்படுகிறது. அது படியாததால் அதிமுகவுடனான கூட்டணி குறித்து அவர் முடிவு செய்யாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் தேமுதிகவில் வந்து இணைந்த ஆயிரக்கணக்கானோரை வரவேற்று அவர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், சட்டப்பேரவை தேர்தலின்போது தி.மு.க.வினர் பெருமளவில் பணம் தருவார்கள். மக்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தி.மு.க.வுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தி.மு.க.வை வீழ்த்தினால்தான் மக்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க முடியும்.
தி.மு.க. ஆட்சியில் பல வண்ணங்களில் பஸ்கள் ஓடுகின்றன. ஆனால், பஸ் கட்டணம்தான் மக்களால் தாங்க முடியாத அளவுக்கு உள்ளது.
நாட்டிலேயே தமிழகத்தில்தான் பெட்ரோல், டீசலுக்கு அதிக அளவில் வரி வசூல் செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. அந்த வரிகளை தமிழக அரசு குறைக்காதது ஏன் என்றார் விஜயகாந்த்.