டெல்லியில் நாளை முதல் இணையதளத்தில் எப்ஐஆர்: போலீஸ் இணைதளத்தில் டவுன்லோட் செய்யலாம்
டெல்லி: டெல்லியில் பதிவாகும் அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் டெல்லி போலீஸ் இணையதளத்தில் நாளை முதல் வெளியிடப்படுகிறது.
பொதுமக்கள் டெல்லி காவல்துறை இணையதளத்தில் (www.delhipolice.nic.in) இதைப் பார்த்து தேவைப்பட்டால் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் ரூ. 25 செலுத்தி காவல் நிலையத்தில் இருந்து எப்ஐஆர் நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது குறித்து ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது,
இனி இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கைகளை மேலேற்றுவோம். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
கடந்த டிசம்பர் மாதம் 6-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அதை பெற்றுக் கொள்ள குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை உண்டு. ஆகவே போலீசார் அதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து தான் இந்த நடவடிக்கை.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் மேலேற்ற வேண்டும் என்றும், பிரச்சனைக்குரிய விவகாரங்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் உயர் நீதிமன்றம் மேலும் தெரிவித்தது.