ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி-திமுக கடும் கண்டனம்
சிபிஐ விசாரணை தொடர்ந்து வந்த நிலையில் நேற்று திடீரென ராசா கைது செய்யப்பட்டார். இதை திமுக தரப்பு எதிர்பார்க்கவில்லை. ராசா கைது விவகாரத்தால் திமுகவுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் சம்பவத்தால் திமுகவில் இறுக்கமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்தப் பின்னணியில் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் கூடியது.
சேகர்பாபு பங்கேற்பு:
காலை பத்தே கால் மணியளவில் அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக் குழுக் கூட்டம் தொடங்கியது. இதில், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தென் மண்டல திமுக அமைப்பாளர் மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்த வட சென்னை மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் சேகர்பாபு, நடிகை குஷ்பு, இயக்குநர் கே.பாக்யராஜ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.
மிகத் தீவிரமான அதிமுககாரராக இருந்து சமீபத்தில்தான் கட்சியில் சேர்ந்த சேகர் பாபுவை, மிக முக்கியமான பொதுக் குழுக் கூட்டத்திற்கு திமுக தலைமை அழைத்துள்ளது அனைவரையும் வியக்க வைத்தது.
கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
- 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு பிரச்சனையில் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கை ஒன்றையே சான்றாக வைத்துக்கொண்டு ஆ.ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், கைது செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்தவிடமாட்டோம் என்று கூறி, ஜனநாயக கடமையை நிறைவேற்ற மறுத்து வரும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி, நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது ஜனநாயக விரோத நடவடிக்கை.
ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்ட காரணத்தாலேயே, அவர் குற்றவாளியாகிவிடமாட்டார் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆ.ராசா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த பிரச்சனையை பொறுத்தவரை திமுக ஒரு திறந்த புத்தகமாக உள்ளது. ஆனால், இதைப் பெரிதுபடுத்தி, எப்படியாவது திமுக மீது களங்கம் சுமத்த நினைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளையும் பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்றைய கூட்டத்தில் ராசாவை கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கும் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மாறாக ராசாவை ஆதரித்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இன்று மாலை கருணாநிதி பேசுகிறார்:
பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை விளக்கி இன்று மாலை முதல்வர் கருணாநிதி சென்னையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார்.