ராசாவிடம் சி.பி.ஐ. இரவு-பகலாக தீவிர விசாரணை!
இந்த விவகாரத்தில் ராசா, தொலைத் தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் சித்தார்த பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகிய மூவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். நேற்று டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் முவரையும் 5 நாள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார் நீதிபதி.
இதையடுத்து ஆ.ராசா, பெகுரியா, சந்தோலியா மூவரையும் அதிகாரிகள் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று 2வது மாடியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். உடனடியாக சி.பி.ஐ. மூவரிடமும் விசாரணை தொடங்கியது.
இரவு வரை இந்த விசாரணை நீடித்தது. நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் தூங்க அனுமதித்தனர்.
சி.பி.ஐ. தலைமை அலுவலக 2 ராசா, பெகுரா, சந்தோலியா மூவரும் தூங்குவதற்கு தனித் தனி அறைகள் கொடுக்கப்பட்டன. ராசாவின் டெல்லி வீட்டில் இருந்து அவருக்கு உணவு எடுத்து வரப்படுகிறது.
மேலும் ராசாவுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகளை அவர் வீட்டில் இருந்து உறவினர்கள் எடுத்து வந்தனர்.
இன்று காலை ராசா, பெகுரா, சந்தோலியா மூவருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகளே உணவு வழங்கினர். அதன் பிறகு உடனடியாக விசாரணை தொடங்கியது. மூவரும் தனித் தனி அறைகளில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
பின்னர் மூவரையும் ஒன்றாக அமர வைத்து விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ராசாவிடம் வாக்குமூலம் கொடுக்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, அவர் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.
8ம் தேதி பிற்பகல் மூவரும் மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர்.
இந்த விசாரணையின் தொடர்ச்சியாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.