ஜெ வருகையின்போது அய்யா வைகுண்டர் கோவிலில் ஆகம விதிமீறல்
கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வந்தபோது ஆகம விதிகள் மீறப்பட்டதாக தென் மாவட்ட நாடார் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வந்தார்.
அவருடைய வருகையின்போது பதியின் ஆகம விதிகள் மீறப்பட்டுவிட்டது என்று சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது தென் மாவட்ட நாடார் கூட்டமைப்பு.
இது குறித்து தென் மாவட்ட நாடார் கூட்டமைப்பு தலைவர் அச்சுதன் கூறுகையில்,
பாலபிரஜாபதி அடிகளாரை கடவுளின் தூதராகத்தான் அய்யாவழி பக்தர்கள் கருதுகிறார்கள்.
அதனால் தான் அவரின் காலில் விழுந்து வணங்கும் போது, அவரே நமது நெற்றியில் திருநீறு பூசி விடுவார். இது தான் இதுவரை இருக்கும் வழக்கம். ஆகமவிதி.
மேலும், ஆண்கள் மேல்சட்டையை கழற்றிவி்ட்டு தலைப்பாகை கட்டிதான் உள்ளே செல்ல வேண்டும். இவை எல்லாமே ஜெயலலிதா வருகையின் போது மீறப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவை குனிந்து வரவேற்று அன்னையே என்று அவருக்கு புகழாரம் சூட்டுவது எந்த வகையில் நியாயம்? என்றார்.
ஆனால் பாலபிரஜாபதியோ ஜெயலலிதா வருகையின் போது, எந்த ஆகமவிதி மீறலும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.