உச்ச நீதிமன்றத்துக்கு கணக்கு காட்டவே ராசா கைது செய்யப்பட்டுள்ளார்! - ஜெ
சென்னை: ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று உச்சநீதி மன்றத்துக்கு காட்டவே ஆ.ராசாவை சி.பி.ஐ. கைது செய்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சென்னையில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் ஓர் அங்கமான தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சொல்கிறார்.
ஆனால், மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரி கபில்சிபிலோ, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு சிறு இழப்புகூட ஏற்படவில்லை என்கிறார். மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படவில்லை என்றால் எதற்காக ஆ.ராசாவை சி.பி.ஐ. கைதுசெய்ய வேண்டும்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி குழப்பமான நிலையில் இருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இதன்மூலம், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு ஒரு பரிகாச பொருளாக மாறியுள்ளது.
ஆ.ராசா மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜே.பி.சி.) விசாரிக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் மாற்றமே இல்லை.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் மத்திய அரசின் ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு விதமான கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டு வரும் சூழ்நிலையில், ஜே.பி.சி. விசாரணைதான் அதற்கு சரியான விடையை அளிக்கும்.
ஆ.ராசா மீதான கைது நடவடிக்கை பொதுமக்களை ஏமாற்றவும், ஸ்பெக்ட்ரம் வழக்கில் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று சி.பி.ஐ. விசாரணையை உன்னிப்பாக கண்காணித்துக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு கணக்குக் காட்டவும்தான் இந்த நடவடிக்கை. இதில் நாட்டு நலனோ, நீதியை நிலை நாட்டும் உத்வேகமோ இல்லை,"என்றார்.