கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு பாஜக ரூ.2 லட்சம்: சுஷ்மா வழங்கினார்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் சில நாட்களுக்கு முன்பு சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பலியான மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக பாஜக கட்சி மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், இன்று வேதாரண்யம் சென்றார்.
தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் உடன் சென்றனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புஷ்பவனம் கிராமத்துக்கு சுஷ்மா சுவராஜ் சென்றார். அங்கு ஜெயக்குமாரின் மனைவி முருகேஸ்வரியை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ஜெயக்குமார் மனைவிக்கு ரூ.2 லட்சத்தை நிவாரண உதவித் தொகையாக வழங்கினார்.
அப்போது பேசிய சுஷ்மா சுவராஜ், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட ஜெகதாப்பட்டினம் மீனவர் பாண்டியன் குடும்பத்திற்கும் பாஜக சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.