கங்கைகொண்டான் ஐடி பார்க் பணிகள் இம்மாதத்திற்குள் முடியும்- அமைச்சர் பூங்கோதை அறிவிப்பு
கங்கைகொண்டன தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நடந்து வரும் பணிகளை அமைச்சர் பூங்கோதை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது,
கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்கா 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக 100 ஏக்கர் பரப்பளவில் ரூ. 10 கோடி செலவில் கட்டமைப்பு பணிகளும், ரூ. 15 கோடி செலவி்ல் கட்டுமானப் பணிகளும் நடந்து வருகின்றன. 50 ஆயிரம் சதுர அடியில் கட்டிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிவடையும். பன்னாட்டு நிறுவனமான சின்டெல் நிறுவன தலைவர் பரத் தேசாய் தலைமையிலான குழுவினர் கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவை பார்வையிட்டு தங்கள் நிறுவனத்துக்கு 50 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இந்த நிலம் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் தொழில் தொடங்க 4 தனியார் நிறவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இந்நிறுவனங்களுக்கு தற்போது கட்டப்பட்டு வரும் 25 ஆயிரம் சதுர அடி அலுவலக பரப்பில் இட ஒதுக்கீடு செய்யப்படும். இம்மாத இறுதிக்குள் கட்டுமான பணிகள் முடிவடைவதால் இங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தங்கள் பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் துவங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.