சிங்கூரில் டாடா வராமல் போனதற்கு நான் காரணமில்லை! - மம்தா அந்தர் பல்டி
ஹால்தியா: சிங்கூரில் டாடா மோட்டார்ஸின் நானோ தொழிற்சாலை வராமல் போனதற்கு நான் காரணமில்லை, என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சரும் த்ரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
சிங்கூரில் நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தியபோதெல்லாம் சும்மா இருந்துவிட்டு, தொழிற்சாலை செயல்படத் தொடங்கும் தறுவாயில் போராட்டத்தை ஆரம்பித்தவர் மம்தா பானர்ஜி.
கட்சித் தொண்டர்கள் மற்றும் விவசாயிகளைத் தூண்டிவிட்ட அவர், இன்னொரு பக்கம் உண்ணாவிரதம் என்று உட்கார்ந்துவிட்டார். வன்முறை, துப்பாக்கி சூடு என சிங்கூரே பெரும் கலவர பூமியானது. இத்தனையையும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அவர், டாடாவே வெளியேறு என கோஷமெழுப்பினார்.
மேற்கு வங்க அரசுக்கும் டாடாவுக்கும் இடையேிலான உறவு சந்தேகத்துக்கிடமானது என்றார். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, இந்த இடத்தில் தொழிற்சாலையே வேண்டாம் என்று முடிவு செய்து குஜராத்துக்கு நானோ தொழிற்சாலையைக் கொண்டு போனது டாடா. அதன் பிறகுதான் நானோ கார்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன. இதனை யாரும் அத்தனை சுலபத்தில் மறந்துவிட முடியாது.
இதனை தனது தனிப்பட்ட வெற்றியாகவே கொண்டாடியவர் மம்தா. எந்த இடத்தில் நானோ தொழிற்சாலை வரக்கூடாது என்றாரோ, அங்கே இப்போது விவசாயம் ஒன்றும் ஓகோவென்று கொழித்துவிடவில்லை. அந்த நிலம் மொத்தமும் இப்போதும் டாடாவின் கட்டுப்பாட்டில் தரிசாகக் கிடக்கின்றன!
இந்த போராட்டத்தில் கிடைத்த பப்ளிசிட்டியை தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தி எம்பியான மம்தாவோ, ரயில்வே அமைச்சர் என்ற வெயிட்டான பதவி கிடைத்ததும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. போராட்டம் நடத்திய விவசாயிகள் என்ன ஆனார்கள், எங்கே போனார்கள் என்றும் தெரியவில்லை!
நானோ தொழிற்சாலை வந்திருந்தால் பல ஆயிரம் வங்காளிகளுக்கு வேலையாவது கிடைத்திருக்கும். அதைக் கெடுத்தது மட்டும்தான் மம்தா போராட்டத்தின் பலன்!
இந்நிலையில், நந்திகிராம் அருகே, ஜெலிங்கம் என்ற இடத்தில் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக அவர் வந்திருந்தார்.
விழாவில் அவர் பேசுகையில், "சிங்கூரில் டாடா அமைக்க இருந்த கார் தொழிற்சாலைக்காக 1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட 400 ஏக்கர் நிலத்தை தான் திரும்ப ஒப்படைக்கக் கோரினோம். மீதமுள்ள நிலத்தில் தொழிற்சாலையை துவங்கியிருக்கலாம். ஏன் துவங்கப்படவில்லை என்பது தெரியவில்லை.
இதற்கு நான்தான் காரணம், தொழிற்சாலை துவங்குவதை எதிர்க்கிறேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரம் செய்கின்றனர். நான் தொழிற்சாலை வருவதை எதிர்க்கவில்லை. விவசாயிகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்குத் தான் எதிர்ப்பு தெரிவித்தேன்...", என்றார்.
உண்மையில் டாடாவிடம் இப்போதும் அந்த 900 ப்ளஸ் ஏக்கர் நிலம் அப்படியேதான் உள்ளது. காரணம் அந்த நிலங்களுக்கு இன்று வரை குத்தகை செலுத்தியுள்ளது டாடா நிறுவனம். எதிர்காலத்தில் வேறு திட்டங்களுக்கு அவற்றைப் பயன்படுத்தப் போவதாகவும் டாடா கூறியுள்ளது. இந்த நிலத்தை டாடாவிடமிருந்து வாங்கி ரெயில்வேக்கு தரவேண்டும் என்று கடந்த ஓராண்டாக மம்தா கூறிவந்ததும், அதற்கு மேற்கு வங்க அரசு ஒப்புதல் தெரிவித்ததும் நினைவிருக்கலாம்.
அரசியல்வாதிகளுக்குப் போராட்டம் என்பது பப்ளிசிட்டி, மூலதனமும் கூட. அதை நம்பி இறங்கும் சாதாரண மக்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். டாடாவுடனான தனது தனிப்பட்ட மோதலுக்கு, மக்களைப் பயன்படுத்தினார் மம்தா. அவருக்கு வேறு வகையில் பலன் கிடைத்துவிட்டது. மக்களுக்கு?