தென் மாவட்ட மக்களைப் புறக்கணித்துள்ளது பட்ஜெட்-டாக்டர் சேதுராமன்
மதுரை: தென் மாவட்ட மக்களை புறக்கணிக்கும் பட்ஜெட்டாக இந்த இடைக்கால பட்ஜெட் உள்ளது என அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
புதிய வரி விதிப்போ புதிய வரி விலக்கு எதுவும் இன்றி இடைக்கால பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களை இன்று வெகுவாகப் பாதிக்கிற விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த தவறிய ஆளும் தமிழக அரசு கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் என்பது போல விலைவாசியை கட்டுப்படுத்த 4000 கோடி ஒதுக்கீடு என்பது பெயரளவிற்கான அறிவிப்பு தான்.
மொத்த வியாபாரிகளின் கள்ளச்சந்தை வியாபாரத்தையும், பதுக்கலையும், ஆன்லைன் வர்த்தகத்தையும் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள் இப்போது ரூ 4000 கோடி ஒதுக்கீட்டினை மூலம் எவ்வாறு விலைவாசியை கட்டுப்படுத்த போகின்றனர் என தெரியவில்லை.
மதுரை, கோவையில் கூட்டுக்குடி நீர் திட்டம் என்பது வாக்குகளை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த பட்ஜெட் தென் மாவட்ட மக்களுக்கு பயன்படாத பட்ஜெட்டாக உள்ளது. சுருக்கமாக சொன்னால் தென்மாவட்ட மக்களை புறக்கணித்துள்ளது.
காவல்துறைக்கு 3239 கோடி ஒதுக்கீடு செய்துள்ள செயல் தேர்தலை மனதில் வைத்து ஆளும் அரசுக்கு போலீசார் சாதகமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புவாக கருத வேண்டியுள்ளது.
மொத்தத்தில் கஜானாவை காலி செய்துள்ள ஆளும் அரசை தேர்தலில் நிச்சயம் மக்கள் தண்டிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.