சட்டசபை தேர்தலுக்கான இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
காரைக்குடி: வரும் சட்டசபை தேர்தலில் இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் நடந்தது. இதற்கு பார்கவ குல சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமன் வரவேற்றார். இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர். பாரி வேந்தர் 11 வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
11 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,
காரைக்குடி-ஆசைதம்பி, சிவகங்கை- சி.குழந்தைசாமி, குன்னம்- ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன், லால்குடி- டாக்டர் பார்கவன் பச்ச முத்து, திருச்சி 2-வது தொகுதி- எஸ்.டி.தங்கவேல், ஸ்ரீரங்கம்- வி.தமிழரசி, திருவரம்பூர்-எட்வின் ஜெரால்டு, மணச்சநல்லூர்- டி.ஆர்.சீனிவாசன், புதுக்கோட்டை கே.பி.என்.சீனிவாசன், திருவையாறு- எஸ்.முத்துகுமார்.
அப்போது பாரிவேந்தர் பேசியதாவது,
மக்களை புரிந்து கொண்டு அவர்கள் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும். வாழ்கின்ற காலத்தில் நாம் வகிக்கின்ற பதவிகளின் செயல்பாடுகளே அந்த பதவிக்கு பெருமை சேர்க்கும்.
நாளும் வளரும் நம் கட்சியை முடக்கவும், உடைக்கவும் சதி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நாம் நமது பலத்தை காண்பிக்க வேண்டும். அரசியலில் நமது சமுதாய மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவும், அரசியல் அதிகாரத்தை பெறவும் நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். நானோ, எனது குடும்பத்தாரோ எப்பொழுதும் எந்த பதவிக்கும் வரமாட்டோம் என்று உறுதி அளிக்கிறேன்.
நமது சமுதாயத்தின் நலனுக்காக மட்டுமே பாடுபட விரும்புகிறேன். நமது கட்சி என்பது நமது சொந்த வீடாகும். நமது வீட்டை அனுபவிக்கும் உரிமையை விட்டு விடாதீர்கள். நமது தனித்தன்மையை நிரூபிக்க இதுவே தக்க சமயம் ஆகும். 42 எம்.எல்.ஏ. தொகுதிகளை நிர்ணயிக்கும் சக்தி நம்மிடம் உள்ளது.
நமது பலம் நாளும் அதிகரித்து வருகிறது. வரும் 26-ம் தேதி பெரம்பலூரில் விவசாயிகள் வாழ்வுரிமை மாநாடு நடத்தவிருக்கிறோம். அதனை வெற்றி மாநாடாக ஆக்க வேண்டும் என்றார்.