சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசின் தோழமை மையம்!
சென்னை: ருத்ரகுமாரன் தலைமையில் செயல்படும் நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம் ஒன்று சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் முதல் விளக்கக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் பெருந்திரளான தமிழீழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் சரஸ்வதி தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பேசினர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன், இணையதளம் மூலம் நேரடியாக தனது வாழ்த்துரையை, 'தோழமை மைய'த்துக்கு வழங்கினார்.
பேராசிரியை சரஸ்வதி பேசுகையில், "இந்த தோழமை மையம், நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவான தளத்தையும், அங்கீகாரத்தையும் இந்திய அளவிலும் அதற்கு அப்பால் உலகம் அளவிலும் பெறுவதற்காக பாடுபடும்," என்றார்.
தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அதன் செயற்பாடுகளையும் விளக்கினார்.
நிகழ்வின் பிரதமர் ருத்ரகுமாரனின் இணையதள உரையில், "கட்சி அமைப்பு வேறுபாடுகளைக் கடந்து ஈழவிடுதலைப் போராட்டம் என்ற இலட்சியத்தை அடைய, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த அனைவரும் அணிதிரள வேண்டும். தமிழ் மீனவர்கள் சிங்கள படைகளால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவங்கள் இலங்கை அரசின் தமிழின அழிப்பின் தொடர்சியே," என்றார்.
மத்தியக் கிழக்கு நாடுகளிலும் தனது செயல்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசு விஸ்தரித்துள்ளதாக ருத்ரகுமாரன் தெரிவித்தார்.