தமிழக மீனவர் மீது தாக்குதல்-இலங்கை கடற்படைக்கு தொடர்பில்லை: பெரிஸ்
திம்பு: தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதற்கும், இலங்கை கடற்படைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் தெரிவித்துள்ளார்.
பூடான் தலைநகர் திம்புவில் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா நேபால் சென்றுள்ளார். இதேபோன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ்-ம் சென்றுள்ளார்.
அங்கு நேற்றிரவு எஸ்.எம். கிருஷ்ணா பெரீஸை சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் நடந்த சந்திப்பின்போது அவர் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை எந்தவித தாக்குதலும் நடத்தக்கூடாது என்று பெரீஸிடம் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் பெரீஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
எங்களிடம் இருக்கும் தகவல்கள்படி தமிழக மீனவர்கள் தாககப்பட்டதற்கும், இலங்கை கடற்படைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால் இது தொடர்பாக ஆதாரம் எதுவும் கொடுத்தால் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம்.
செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்துப் பார்க்கையில் இலங்கை கடற்படை மீது எந்த வகையிலும் குற்றம் கூறமுடியாது. மீனவர்கள் பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கைக் குழு விரைவில் கூடி இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து ஆலோசனை நடத்தும் என்றார்.