பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரணாப் அழைப்பு
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்கட்சிகள் கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் முடக்கின. ஆயினும் மத்திய அரசு கூட்டுக்குழு விசாரணை நடத்த மறுத்துவிட்டது. இந்நிலையில் வரும் 21ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது.
இந்த கூட்டத்தொடரில் ரெயில்வே பட்ஜெட், மத்திய பட்ஜெட் தாக்கல் அதன் மீதான ஓட்டெடுப்பு, முக்கிய மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன. ஆனால் இந்த முறையும் பாராளுமன்றத்தை முடக்கப்போவதாக பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து எதிர்கட்சிகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி சபாநாயகர் மீராகுமார் நேற்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அது தோல்வி அடைந்தது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார். அதில் அவர் எதிர்கட்சிகளை சமாதானப்படுத்த முயற்சி மேற்கொள்வார் என்று தெரிகிறது. இந்த கூட்டமும் தோல்வி அடைந்தால் வரும் கூட்டத்தொடரிலும் பாராளுமன்றம் முடங்கும் அபாயம் உள்ளது.