காங்கிரஸில் எந்தப் பதவி தந்தாலும் ஓகே! - சிரஞ்சீவி
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியில் எந்தப் பதவி தந்தாலும் ஏற்கத் தயார் என்று கூறியுள்ளார் சிரஞ்சீவி.
பிரஜா ராஜ்ஜியம் கட்சி தலைவர் சிரஞ்சீவி சமீபத்தில் டெல்லியில் சோனியாகாந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். தனது கட்சியையும் காங்கிரசில் இணைத்தார்.
இதுகுறித்து அவர் ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நான் எப்போதுமே ஊழலுக்கு எதிரானவன்தான். முறைகேடு பற்றி புகார் வந்தால் அதை முறைப்படி விசாரிப்பது நல்லது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகள் கூறும் ஸ்பெக்ட்ரம் பற்றிய புகார்கள் உண்மையானதாக இருக்குமோ என்று நாட்டு மக்கள் நம்பி விடுவார்கள்.
எனவே இவ்விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மிகவும் திறமையானவர். நாட்டு நலனில் மிகுந்த அக்கறை உள்ளவர். அவரது தலைமையின் கீழ் நான் சிறப்பாக செயல்படுவேன். எனக்கு காங்கிரசில் எந்த பதவி தந்தாலும் ஏற்கத்தயாராக இருக்கிறேன்..., என்றார்.