ஆருஷி கொலைக்கு பெற்றோர் தான் காரணம் : சிபிஐ நீதிமன்றம் குற்றச்சாட்டு
கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தார் ஆருஷி. அவர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. முதலில் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார் மீது சந்தேகம் எழுந்தது. பின்னர் வீட்டு வேலையாட்கள் மீது சந்தேகம் எழுந்தது.
ஆனால் இறுதியில் இந்த வழக்கில் போதிய ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறி சமீபத்தில் வழக்கை மூட முடிவு செய்த சிபிஐ இதுதொடர்பான அறிக்கையையும் சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. ஆனால் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று ஆருஷியின் பெற்றோர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை, சாட்சியங்கள் அழிப்பு, கூட்டுச் சதி உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீதி சிங் ஆருஷியின் பெற்றோரை வரும் 28-ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
சிபிஐ அறிக்கையை எதிர்த்து ராஜேஷ் தல்வார் தாக்கல் செய்த மனுவை நீதமன்றம் தள்ளுபடி செய்தது. இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்த வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராஜேஷ் மற்றும் நுபூர் தல்வார் முழு உண்மையையும் தெரிவித்துள்ளார்களா என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வழக்கு குறித்த உண்மை விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.