திருப்பூர் சாய ஆலைகள் விவகாரம் : இன்று திருப்பூரில் அதிமுக உண்ணாவிரதம்
சென்னை: திருப்பூர் சாயப்பட்டறை பிரச்சனையை தீர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருப்பூரில் அதிமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
திருப்பூர் சாய, சலவை ஆலைகளின் கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலக்காமல் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தவறிவிட்டது. அதனால் தான் அனைத்து ஆலைகளையும் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி திருப்பூரில் உள்ள 700-க்கும் மேற்பட்ட ஆலைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு வேலபார்த்து வந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். மேலும், நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி உற்பத்தி இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆலைகளை நம்பி இருக்கும் பின்னலாடை தொழிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பின்னலாடைத் தொழிலும் முடங்கும் பட்சத்தில் தினமும் ரூ. 50 கோடி அளவுக்கு வர்த்தக இழப்பும், அந்நியச் செலாவணி இழப்பும் ஏற்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி இன்று (11-ம் தேதி) அதிமுக சார்பில் திருப்பூர் நகர ரயில் நிலையம் முன்பு அமைந்துள்ள குமரன் சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதற்கு கழக அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் தலைமை தாங்குவார். மாவட்டக் கழகச் செயலாளர் சி.சண்முகவேலு எம்.எல்.ஏ., கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் செ.ம.வேலுச்சாமி எம்எல்ஏ திருப்பூர் தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருப்பூர் சி.சிவசாமி, பொள்ளாச்சி தொகுதி அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுகுமார், அவினாசி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆர். பிரேமா மற்றும் திருப்பூர் நகரக் கழகச் செயலாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.