ஸ்பெக்ட்ரம் விவகாரம்... அரசு வங்கி அதிகாரிகள் கைதாகிறார்கள்!!
எவ்வளவு பெரிய பதவி, அந்தஸ்தில் இருந்தாலும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும் என உச்ச நீதி மன்றம் அளித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சிங்வி, கங்குலி இருவரும் கூறுகையில், இந்த வழக்குக்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தர விட்டனர்.
இதையடுத்து 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை சி.பி.ஐ. வக்கீல் கே.கே. வேணுகோபால் தாக்கல் செய்தார்.
பிறகு அவர் தனது வாதத்தில், 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு வங்கிகள் விதிகளை மீறி ரூ.11 ஆயிரம் கோடி வரை கடன்கள் கொடுத்துள்ளன என்றார். அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் உள்ள 22 தொலைத் தொடர்பு வட்டங்களில் செயல்பட 122 உரிமங்கள் வழங்கப்பட்டன.
இதில் 110 உரிமங்களைப் பெற்ற நிறுவனங்கள் தொலைத் தொடர்பில் எந்த முன் அனுபவமும் இல்லாதவை. அந்த தொழில் நிறுவனங்கள் பெரிய தொகைகளை விதிகளை மீறி பெற்றுள்ளன என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விண்ணப்பங்களை சரியாக ஆய்வு செய்யாமல், விதிகளை மீறி வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? தொலைத் தொடர்புத்துறைக்கு தொடர்பே இல்லாத நிறுவனம் கடன் வாங்கியது எப்படி? என்று கேள்வி எழுப்பினார்கள்.
வங்கிக் கடன்களை விதிகளை மீறி கொடுத்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து வங்கிக் கடன்கள் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ.யின் வங்கிப் பிரிவு தீர்மானித்துள்ளது.
வங்கி அதிகாரிகள் விதிகளை மீறி கடன் கொடுத்தது பற்றி உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கை தொடுத்த மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் கேட்டுக் கொண்டார். இதையடுத்து வங்கி அதிகாரிகள் கடன் கொடுப்பதற்கு முன்பு பரிசீலனை செய்யாமல் போனது ஏன்? என்பது பற்றி விசாரணை நடைபெற உள்ளது. இந்த விசாரணையின் போது வங்கி அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.