கறுப்புப் பணம் தடுப்பு: பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுடன் இந்தியா ஒப்பந்தம்-லண்டனில் கையெழுத்தானது
பல இந்தியர்கள் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை எல்லாம் வெளியே கொண்டு வரும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு கட்டமாக பல்வேறு நாடுகளுடன் வரி விவர பரிமாற்ற ஒப்பந்தம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுடன் வரி விவர பரிமாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா லண்டனில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் இங்கிலாந்திற்கான இந்திய துணைத் தூதர் நளின் சூரி மற்றும் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவின் துணைப் பிரதமர் டான்சியா பென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன்படி அந்நாட்டு வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மற்றொரு சிறு தீவு நாடான பெர்முடாவுடனும், சமீபத்தில் ஐல் ஆஃப் மேன் எனும் தீவுடனும் இந்தியா வரி விவர பரிமாற்ற ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் செய்யப்படாத நாடுகள் அங்கு இருக்கும் கறுப்பு பண விவரத்தை வெளியிடத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.