பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு! - ஐஓசி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்தி வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2-50 உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் நரசிம்மன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ஐஓசியின் நிகர லாபம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிந்த காலாண்டில் ரூ 1634.76 கோடி லாபம் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், நமக்கு சாதகமான சூழ்நிலை தொடருமானால் அடுத்து வரும் மாதங்களில் பெட்ரோல் விலையை குறைக்க வாய்ப்புள்ளது.
தற்போது டீசல், மண்எண்ணெய், சமையல் கியாஸ் ஆகியவற்றை குறைந்த விலையில் விற்பதால் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு தினமும் ரூ. 190 கோடி இழப்பு ஏற்படுகிறது. 1 லிட்டர் டீசலுக்கு ரூ.8.20-ம், மண்எண்ணெய்க்கு ரூ.20.56-ம், சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 356-ம் இழப்பு ஏற்படுகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ 75000 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. இதில் ரூ 42000 கோடி அரசிடமிருந்து கிடைத்துள்ளது, மானியமாக, என்றார்.